Skip to content
GitHub Twitter

Tamil Musing

சாட்டையின்றி யார் சுழற்றியது
விசை தீறாமல் சுழல்கிறது
உலகம்!!!

மகள் உறக்கத்தில் பூக்கிற குறுநகையில்
புத்தன் தெரிகிறான்
புத்தனுக்கு தவத்தில் கனவு வருமா என்ன
அதுசெரி தவமும் காதல் தானே
அவள் உறங்க நான் கனவு காண்கிறேன்!

எழுது
உன் காதல்கள் பற்றி
கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள
விரும்பும் புரட்சி பற்றி
எழுது
உன்னை ஏமாற்றும்
போலிப் புரட்சியாளர்கள் பற்றி
எழுது
சொல்லும் செயலும்
முயங்கி நிற்கும் அழகு பற்றி
எழுது
நீ போடும்
இரட்டை வேடம் பற்றி
எழுது
எல்லோரிடமும் காட்ட
விரும்பும் அன்பைப் பற்றி
எழுது
எவரிடமும் அதைக் காட்ட
முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி
எழுது
எழுது உன் கவிதையை நீ எழுதுஅதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை
நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு
~சு.ரா